அழகிய மலைகள், காடுகள், கனிமவளம், நீர் வளம், கடல் வளம் என அனைத்துவித இயற்கை எழில்களையும் பெற்ற பூலோக சுவர்கம் என வர்ணிக்கபடும் ஒரு அழிகிய அற்புதமான தீவு எமது இலங்கை ஆகும். எமது வளங்களை உற்று நோக்கினால் பல நாடுகளுக்கு ஈடு இணையற்ற அதிகமான பொக்கிஷங்களை நாம் கொண்டுள்ளோம்.
கடந்த காலங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகள், பொருளாதார முன்னகர்வுகளை அவதானிக்கும் பொழுது பாரியதொரு அபாய விளைவுகளை நாம் எதிர்நோக்கியிருப்பதை காணலாம். இந்த கட்டுரையின் நோக்கம் அரசாங்க நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதோ, எதிர்கட்சிகளை விமர்சிப்பதோ, குற்றம் சாற்றுவதோ அல்ல மாறாக எமது நாட்டின் அண்மைகால நிகழ்வுகளை உற்று நோக்குகின்ற பொழுது நாம் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டிய பல கசப்பான உண்மைகளை வெளிக் கொண்டுவருவதற்கான ஒரு சிறிய முயற்சியே ஆகும்.
கடந்த இரண்டு தசாப்த்தங்களாக அரசியல் ரீதியான ஆர்பாட்டங்கள், வேலை பகிஷ்கரிப்புகள் நாடு தழுவியரீதியில் நடைபெற்று வருவதை காணலாம். இருப்பினும் கடந்த சில வருடங்களாக இவ்வாறான போராட்டங்கள், பகிஷ்கரிப்புகள் ஒரு தீவிர நிலையை அடைந்துள்ளமை யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.
இதற்கான காரணங்களை சற்று ஆராய்ந்து பார்க்கும் பொழுது மிகவும் அற்பமான, இலட்சியமற்ற பின்னனிகளை கொண்டுள்ளன. அரசியல் ரீதியானஆர்பாட்டங்கள், தொழிற்சங்களின் வேலை பகிஷ்கரிப்பு, அரசாங்க ஊழியர்களின் போராட்டங்கள், பகிஷ்கரிப்புகள், மாணவர்களது போராட்டங்கள் என கூறிக்கொண்டே போகலாம். இவ்வாரான அனைத்துவித போராடங்கள் பகிஷ்கரிப்புகளிலும் ஒரு சில விசமிகளின் பின்னனியில் நிற்பது பொதுமக்கள் ஆகிய நாமே ஆகும்.
பிரச்சினைகளுக்கான தீர்வுகள் போராட்டங்களும், பகிஷ்கரிப்புகளும் மாத்திரமா? இன்று அரசியல் சக்திகளின் ஒரு முக்கிய கேடயமாக இந்த போராடங்களும் பகிஷ்கரிப்புகளும் மாத்திரமே காணப்படுவது கவலைக்குறிய அம்சாகும். போராடங்கள் தவரானது அல்ல ஆனாலும் அனைத்து விடயங்களுக்கும் தீர்வுகளை பெற்றுத்தரக் கூடியதும் அல்ல இதன் விளைவுகளையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
வருங்கால சந்ததியினருக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய இன்றைய எமது அரசியல் வாதிகளின் நிலை என்ன? அவர்களின் பின்னால் குடைபிடித்துக் கொண்டிருப்பவர்கள் யார்? இன்றைய காலகட்டத்தில் அரசியல் என்பது ஒரு சமூக மாற்றத்தின் ஒரு இன்றியமையாத சக்தியாகும். இந்தஅரசியல் சக்திகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்புகள் இன்று எவ்வகையிலானது? அந்த அரசியல் சக்திகள் பொதுமக்களை எவ்வாறு கையாளுகின்றனர் என்பதை நாம் புரிந்துகொள்ளல் வேண்டும்.
உலக வரலாறுகளை அலசி ஆராய்ந்து பார்கின்ற பொழுது பொது மக்களுக்காக பல தியாகங்களை செய்த சமூக மேன்படுகளுக்காக தமது வாழ்க்கையே அர்பணித்த பல நல்ல உள்ளங்களை, தலைவர்களை வரலாறு நெடுகிலும் நாம் கொண்டிருந்தோம். இது போன்று இலங்கையிலும் பல தசாத்தங்களுக்கு முன் எமது சுதந்திரத்துக்காவும் நாட்டின் பல அபிவிருத்தி பணிகளுக்காகவும் அயராது உழைத்த பல தலைவர்களை நாம் கொண்டிருந்தோம்.
சரி சுற்றி வளைக்காமல் விடயத்துக்கு வருவோம் கடந்த சில வருடங்களாக எமது அரசியல் மக்கள் நலன் போன்ற அடிப்படை அம்சங்களில் இருந்து விலகி ஒரு தனி சக்தியாக பயணித்துக் கொண்டிருகின்றது. அதாவது ஒருஅரசியல்வாதி என்பவர் மக்களால் தெரிவுசெய்யப்பட்டு, எம்மை அரசாங்க விடயங்களில் முன்னிறுத்தும் ஒரு பிரதிநிதி. இன்று இவர்களுக்கும் எமக்கும் இடையிலான தொடர்ப்பு எவ்வகையிலானது? அவர்களை தொடர்பு கொள்வதற்கான வழிமுறைகள் என்ன? இவர்கள் தேர்தல்களுக்காக எவ்வாறு தெரிவு செய்யபடுகின்றனர்? அனைத்தும் கேள்வி குறிகளே அன்றிவேறில்லை.
எமது பிரதி நிதிகள் என்ற ரீதியில் அவர்களது வருங்கால சந்ததியினருக்கான முன்ணுதாரணங்கள் எவ்வாறானது?? அவர்களது சேவைகள் சமுகத்தில் எவ்வாரான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது? இது போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும் பொழுது எமது அவல நிலை நன்குபுலப்படும். மக்களுக்காக குரல் கொடுக்கும் சேவை உள்ளம் கொண்ட அரசியல்வாதிகள் இன்றுஎங்கே?
தொழிற்சங்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களின் வேலை பகிஷ்கரிப்புகளால் பதிக்கப்படுவதும், இழப்புகளுக்கு முகம் கொடுப்பதும் இதன் பின்னனியில் இருக்கும் பொதுமக்களாகிய நாமே அன்றி வேறு யாரும் இல்லை. வைத்தியர்கள் வேலை பகிஷ்கரிப்புகளை மேற்கொண்டால் அதன் பாதிப்பு எவ்வாறானது? பாதிக்கப்படுவது எமது சகோதரர்களில் யாரோ ஒருவரே அன்றி வேறு யாரும் இல்லை. ஆசிரியர்களின் போராடங்களால் மாணவர்களது பொன்னான நேரம்வீணாக்கப் படவில்லையா? போக்குவர்த்து சங்கங்களின் வேலை பகிஷ்கரிப்பால் ஏற்பட்ட பொருளாதார ரீதியான இழப்புகள் பாரதூரமானதாக தெரியவில்லையா?
இவ்வாரான செயற்பாடுகளால் பாதிக்கபடுவது எமது நாட்டின் அபிவிருத்தியும் வருங்கால சந்ததியினரின் எதிர்காலமும் மாத்திரமே ஆகும். இவ்வாறான நிகழ்கவுளால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகள், மக்கள் நலன்கள் கருத்திற் கொள்ளப்படாமை மிகவும் கவலைக்குறிய விடயமாகும். இவ்வாரான ஆர்பாட்டங்களை மேற்கொள்ளும் போது தூர நோக்கின்றி பின்விளைவுகள் பற்றிய எந்தவித கரிசணையும் இன்றி இருப்பதை சர்வ சாதரணமாக நாம் காணாலாம். இதன் விளைவுகளாகவே இந்த போராடங்கள் இன்று கழவரமாக உயிர இழப்புகள் வரை சென்று கொண்டிருக்கின்றன.
அதுமாத்திரமன்றி எமது நாட்டை பல்லாயிரக்கணக்கான சுற்று பயணிகள் தரசிகின்றனர், நாம் பொது இடங்களில் மேற்கொள்ளும் இது போன்ற போராட்டங்கள் அவர்களது உள்ளங்களில் எவ்வாரான எண்ணங்களை தோற்றுவிக்கும் என்பதையும் நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
சற்று சிந்தித்து பாருங்கள் இந்த அழகிய தீவில் நாம் கொண்டிருக்கும் வளங்களை பயன்படுத்த தெரியாதவர்களாக, குருடர்கள் போன்று வாழ்ந்து கொண்டிருகின்றோம், அன்றைய சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளின் இன்றைய நிலை என்ன??
அனைத்து வித வளங்களை கொண்டுள்ள எமது அவல நிலை என்ன? இயற்கை வளம் குறைவாக இருந்தாலும் நல்ல மனிதவளம் இருந்தால், குறைவான இயற்கை வளத்தைக் கொண்டே நிறைவான முன்னேற்றத்தைப் பெறமுடியும். இதற்கு நல்ல முன் உதாரணம் ஜப்பான் நாடு. திறமைசாலிகள், கடின உழைப்பாளிகள், எல்லாவற்றுக்கும் மேலாக தேசப்பற்று மிக்கவர்கள், இந்தத் தகுதி உள்ள ஜப்பானியர் களால் சாதிக்க முடிந்தது.
வைத்தியதுறையில் வளர்ச்சி கண்டுவிட்டோம், போக்குவர்த்து துறையில் விருத்தியடைந்துவிட்டோம், கணணி மற்றும் தொழிநுட்ப துறைகளில் வள்ளவர்கள் எனபீற்றித்திரியும் எமது கண்களுக்கு எந்தவித மருத்துவ வசதியும் அற்ற கிராமங்கள், கணணி பற்றிய எவ்வித அறிவும் அற்ற குழந்தைகள், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் அற்ற பல நூறு கிராமங்கள், போக்குவரத்து வசதிகளுக்காக அவதியுறும் மக்கள் புலப்படாமை கவலைக்குரிய விடயமாகும்.
இன்று அண்ணிய நாடுகள் 30000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னுள்ள மக்கள் மாவு அரைதார்களா இல்லையா என்ற அளவில் ஆய்வுகள் ஆராய்சிகள் செய்து கொண்டிருகின்றனர். கல்வித்துறையில் எமது வளர்ச்சி என்ன? இன்னும் அண்ணிய நாடுகளின் கண்டுபிடிப்புகளிலே தங்கி இருகின்றோம்.
எமது அல்லுறும் மக்களை, சாதிக்கும் திறன் இருந்தும் வசதியின்றி வாழிகாட்டல் இன்றி தவிக்கும் குழந்தகளை பற்றி ஆராய்வதற்கும் யாரும் இல்லை. இவர்களுக்கான அடிபடை வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கான ஆர்பாட்டங்கள் எங்கே? இவ்வாரான விடயங்களுக்காக எமது நாட்டையும் வளம்பெற்ற நாடாக மாற்றுவதற்கு அவரகள்து உரிமைகளை பெற்று கொடுப்பதற்கு முயற்சித்தால் அதில் ஒரு நியாம் இருக்கும். அரசியல்வாதிகளுக்கு குறை கூருவதில் எந்ந பயனும் இல்லை. நல்ல அரசியல்வாதிகளை தெரிவு செய்யாமையும், அதற்கான சந்ததிகளை உருவாக்காத பொது மக்கள ஆகிய நாமே குற்றவாளிகள் ஆவோம்.
தற்போதைய போராடங்கள், ஆர்பாட்டங்கள், வேலை பகிஷ்கரிப்புகள் எமக்கு அதிக இழப்புகளை ஏற்படுத்துவதாகவே இருகின்றன. இந்த நிலை மாற வேண்டும் நாம் எதிர்கால நலன் கருதி பல புதிய திட்டங்களுக்காக முயற்சிக்க வேண்டும். இலங்கைக்கு நல்ல வருவாயை பெற்று தந்த இறப்பர், தேயிலை போன்ற பெருந்தோட்ட பயிர் செய்கையை அன்று ஆங்கிலேயர் உருவாக்கவில்லையா? ஏன் நம்மால் ஒரு மாற்றத்தை நோக்கி சிந்திக்க முடியாது? அனைத்துவித இயற்கை வளங்களையும் கொண்ட எம்மால் ஏன் இன்னும் இது போன்ற புதிய திட்டங்ளை உருவாக்க முடியாது உள்ளது? கடந்த காலங்களில் இது போன்ற எவ்வித திட்டங்களும் நாட்டின் எதிர்காலம் கருதி எமது அரசாங்களால் நடைமுறைபடுத்தாமை மிகவும் கவலைக்குறிய அம்சமாகும்.
அனைத்து விடயங்களையும் எதிர்மாறாக சிந்திக்கமால் நல்ல நோக்குடன் சிந்திதால் நாமும் சாதிக்கலாம். தடைகளைக்கு முற்றுபுள்ளியாய் இருந்து மடிவதை விட கால்புள்ளிகளாய் இருந்துசாதித்து காட்டுவோம்.
ஹஸான் மூஸா