அண்மைக்கால நிகழ்வுகளின் விளைவுகளினுடாக இன்று இலங்கையில், இஸ்லாம் மிகவும் அதிகமாக அலசப்படும் ஒரு முக்கிய பேசு பொருளாக மாறியுள்ளது. இதன் மற்றுமொரு அங்கமாக இலங்கை ஊடகங்களின் பார்வையில் இஸ்லாம், சமூகத்தில் எவ்வாறானதொரு தாக்கத்தை, பிரதிபலிப்பை ஏற்படுத்துகின்றது என்பதை முஸ்லிம்களாகிய எம்மால் இன்று கண்டிப்பாக ஆராய வேண்டிய ஒரு முக்கியமான விடயமாகும்.
இது பற்றிய காரசாரமான விமர்சனங்கள், கருத்துக்கள், பல்வேறுபட்ட கண்ணோட்டங்கள் முஸ்லிம்கள் மத்தியில் காணப்பட்டாலும் இவை சரியான முறையில் கையாளப்படுகின்றனவா என்பது கேள்விக்குறியே ஆகும். திவயின, மவ்பிம, லக்பிம பத்திரிகைகள் மற்றும் இணையத்தள ஊடகங்களான லங்கா சி நிவ்ஸ், சிங்கள ராவய, தர்மதீபயே இரநம, பெரமுனே போன்ற பேரினவாத சக்திகள் தமது ஊடகங்களிணுடாக இஸ்லாம் பற்றிய தவறானதொரு கண்ணோட்டத்தை முஸ்லிம் அல்லாத ஏனைய சமுகத்தவரிடம் தோற்றுவிப்பதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன.
அண்மைக் காலமாக இப்பத்திரிகைகளில் பிரசுரிக்கபட்ட செய்திகளால் இவை நன்கு ஊர்ஜிதப் படுத்தப்பட்டுள்ளமை யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும். அது மாத்திரமன்றி ஒரு குறிபிட்டதொரு குழு இஸ்லாத்துக்கு எதிராக பலமானதொரு சக்தியுடன், சிறந்த திட்டமிடலுடன் முகப் புத்தகத்தின் ஊடாகவும் இஸ்லாம் பற்றிய தவறான கருத்துகளை முஸ்லிம் அல்லாதோரிடம் கொண்டு செல்லும் ஒரு நடவடிக்கையை முனைப்புடன் செய்து கொண்டிருகின்றது.
இவர்களது செயற்பாடுகளும், குற்றச்சாட்டுகளும் நாம் எமது வரலாறுகளில் காணாத ஒரு புதிய விடயம் அல்ல. இருப்பினும் இலங்கையில் இவ்வாறானதொரு நெருக்கடியை எதிர் நோக்குவது இதுவே முதற் தடவையாகும். அவற்றின் பாரதூரமான விளைவுகளிலிருந்து பாதுகாப்பு பெறுவது அனைவரது கடமையாகும்.
இவர்களது செயற்பாடுகளை நுணுக்கமாக அவதானிக்கும் பொழுது இவை அலட்சியமாக கருதக்கூடிய இலகுவான பிரச்சினைகள் அல்ல. இவற்றின் பாரதூரமான விளைவுகளை நாம் எதிர் கொள்ள வேண்டிய காலம் மிகவும் வேகமாக நெருங்கிக் கொண்டிருப்பதை உணராமல் எமது சமுகம் இன்னும் உறங்கிக் கொண்டிருகின்றது. நாங்கள் எண்ணுவதை விட அவர்கள் தமது இலக்குகளின் பல கட்டங்களை தாண்டி கிளைகள் விட்டு வளர்ந்து காணப்படுகின்றனர்.
அனுராதபுரம், தம்புள்ள, குருநாகல வாணி வீதி, வெல்லவ தேதுரு ஒய, அம்பன் போல, தெகிவளை, ராஜ கிரிய பள்ளிகள் என பட்டியல் நீள ஆரம்பித்தும் முஸ்லிம்கள் இன்னும் உணர்ந்து கொள்ளவில்லையா? இன்னும் இவைகளின் பின்னணியில் ஒரு சில குறிப்பிட்ட நபர்களின் சதி என்ற குறுகிய எண்ணம் கொண்டுள்ளீர்களா? இவர்களது செயற்பாடுகள் பள்ளிகளுடன் மாத்திரம் மட்டுப்படுவிட்டது என்ற எண்ணம் உண்டா?
சகோதர்களே உறங்கிய காலம் போதும் விழித்துக் கொள்ளுங்கள் இல்லாவிடின் மியன்மாரில் நிகழும் அவலங்கள் எமக்கும் எமது சகோதரர்களுக்கும் நிகழும் காலம் வெகு தொலைவில் இல்லை. நாம் மிகவும் அவதானத்துடன் இவற்றுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது எம் அனைவர் மீதும் அத்தியாவசிய கடமையாகும்.
சகோதர்களே உறங்கிய காலம் போதும் விழித்துக் கொள்ளுங்கள் இல்லாவிடின் மியன்மாரில் நிகழும் அவலங்கள் எமக்கும் எமது சகோதரர்களுக்கும் நிகழும் காலம் வெகு தொலைவில் இல்லை. நாம் மிகவும் அவதானத்துடன் இவற்றுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது எம் அனைவர் மீதும் அத்தியாவசிய கடமையாகும்.
நாங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயம் எம்மை அறியாமலே முஸ்லிம் என்ற பெயரில் நாமே இஸ்லாத்துக்கு பெரிய எதிரிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இலங்கையில் பல்லின சமுகத்தவருக்கு மத்தியில் ஒரு சிறுபான்மையின சமூகமாக வாழும் நாம், எம்மில் ஒரு சிலர் விடும் சிறு தவறுகளால் கூட முழு முஸ்லிம் சமூகமும் பாதிப்படையக் கூடிய ஒரு அச்ச நிலை காணப்படுகிறது.
புத்தளத்தில் இடம்பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கொலை, பலபிடிய இளைஞர்கள் தாக்கப்பட்டமை, அண்மையில் மன்னாரில் இடம்பெற்ற ஆர்பாட்டங்கள் போன்ற அனைத்து சம்பவங்களையும் இஸ்லாத்துடன் தொடர்பு செய்து பெரும்பான்மையின மக்களை முஸ்லிம்களின் மீது ஏவி விடுவதற்கு சில ஊடகங்களின் செய்த முயற்சி இதற்கு சிறந்த உதாரணங்களாகும். உங்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக முழு முஸ்லிம் சமூகத்தையும் பழி கொடுக்கும் இழி செயலுக்கு துணை போவதிலிருந்து பாதுகாப்பாக இருங்கள். ஒரு சிலர் விடும் தவறுகளை கூட இனக்கலவரங்களாக மாற்றுவதற்கு சில தீய சக்திகள் தருணம் பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களின் செயற்பாடுகள் மிகவும் தீவிரமாக நாடு தழுவிய ரீதியில் பல கோணங்களில் நடைபெற்றுக் கொண்டிருகின்றன. இஸ்லாம் முஸ்லிம் அல்லாதவரை கொலை செய்யத் தூண்டும் ஒரு மார்க்கம் எனவும், இலங்கையில் முஸ்லிம் அல்லாதவர்களை கொலை செய்யும் காலம் வெகு தொலைவில் இல்லையெனவும், அதன் ஆரம்பமாக மேற் கூறிய சம்பவங்களுடன் தொடர்பு செய்து கருத்துளையும் வெளியிட்டு வருகின்றனர். இவர்களது இவ்வாறான செயற்பாடுகள் இன்று பல இளைஞர்களிடத்தில் பாரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை நாம் உணரலாம்.
இவர்களது செயற்பாடுகள், பிரதேசம், கிராமம், பல்கழைக்கழகங்கள் என்ற ரீதியில் பறந்து விரிந்து சென்று கொண்டிருகின்றது. முஸ்லிம்களது வியாபாரங்களை பகிஷ்கரிப்பதற்கு தூண்டுதல், இஸ்லாம் பற்றிய தவறான கருத்துகளை பரப்புதல், பேரினவாத மக்களை முஸ்லிம்கள் மீது ஏவி விடுதல் இவர்களது பிரதான நோக்கமாகும்.
இவர்களது இஸ்லாம் பற்றிய ஒரு சில தவறான கருத்துக்கள்.
- அல் - குர்ஆன் வசனங்களை திரிவு செய்து விமர்சித்தல்.
- இஸ்லாம் தீவிரவாதத்தை தூண்டும் மார்க்கம் என பிரச்சாரம் செய்தல்.
- நபி (ஸல்) அவர்களை இழிவு செய்தல்
- பெண்ணுரிமை
- உணவுக்காக பிராணிகளை அறுத்தல்.
மேலும் இவர்கள்
முஸ்லிம்களுக்கு எதிராக முன் வைக்கும் பிரதான குற்றசாட்டு முஸ்லிம்களால்
பௌத்தர்களின் பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதாகவும் சிங்களப் பெண்மணிகள்
காதல் என்ற போர்வையில் எமாற்றப்படுவதாகவும் ஆகும்.
அவற்றிலும் முக்கியமாக குறகல, முஹுது மகா விகாரை, தேவன கல போன்ற பௌத்த பூர்வீக
சித்தஸ்தானங்கள் முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருவதாக
இணையத்தளம் மூலம் மேற் கொள்ளும் பிரச்சார நடவடிக்கைகளை இன்றும் எம்மால் காண
முடிகின்றது.
இது போன்ற செயற்பாடுகளுக்கு அரசாங்கத்தினால் எவ்வித தீர்வுகளும், நடவடிக்கைகளும் எடுக்கப்படாமை, அரசியல் வாதிகளின் மௌனம், இவைகளின் பின்னணியில் இவர்களும் பெரும் புள்ளிகளாக இருக்கக் கூடும் என்ற
ஐயப்பாட்டை முஸ்லிம்கள் மத்தியில் வெகுவாக ஏறபடுத்தியுள்ளது. அண்மையில் இடம்பெற்ற இது போன்ற சம்பவங்களின் போது இவர்களால் மேற்கொள்ளப்பட்ட மந்தமான தீர்வுகள், ஒன்றுக்கு ஒன்று முரணான கருத்துக்கள் மென்மேலும் இது போன்ற சந்தேகங்களுக்கு பலம் சேர்கின்றன.
எனவே முஸ்லிம்கள் ஆகிய நாம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய ஒரு முக்கிய கால கட்டம் இதுவாகும். இவர்களது இஸ்லாத்துக்கு எதிரான பிரசாராம், அல் குர் ஆன் பற்றிய விமர்சனம் ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடளுக்கான ஒரு அரைகூவலாகும். இதனை சரியான முறையில் கையாள்வது ஒவ்வொரு முஸ்லிம் புத்திஜீவியினதும் கடமையாகும்.
இவர்களது இஸ்லாம் பற்றிய தவறான கருத்துகளுக்கு, விமர்சங்களுக்கு தக்க ஆதரங்களுடன் விளக்கம் அளிப்பதற்கு உலமாக்கள் முன்வர வேண்டும் மற்றும் இஸ்லாம் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்வதற்கும் , இஸ்லாம் பற்றிய தகவல்களை சிங்கள மொழியில் பெற்றுக் கொள்வதற்குமான போதிய வளங்களை அதிகரிப்பதும் எமது இன்றைய காலத்தின் கட்டாய தேவையாகும்.
ஹஸான் மூஸா



No comments:
Post a Comment